முதலை பொறிக்குள் சென்று நீந்தி விளையாடிய விசித்திர மனிதர்கள்

அவுஸ்ரேலியாவில் முதலைக்கு வைக்கப்பட்டிருந்த பொறிக்குள் சென்று தைரியமாக 4 பேர் புகைப்படம் எடுத்த நிகழ்வு அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் டோக்லஸ் கடற்கரைக்கு அருகில் உள்ள ஏரியில் முதலைகள் அதிக அளவில் உள்ளன. அவை அங்கு செல்லும் மனிதர்களை வேட்டையாடி வருகின்றன. சமீபத்தில் 79 வயது மூதாட்டி ஒருவர் ஆற்றில் உள்ள முதலைக்கு இரையானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த ஏரியில் முதலைக்காக பொறி வைக்கப்பட்டிருந்தது. அந்த பொறியில் 4 பேர் தைரியமாக நின்று புகைப்படம் எடுத்துள்ளனர். பொறிக்குள் சென்றும் அதனை சுற்றியும் நீந்தி விளையாடி உள்ளனர்.

அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதைக்கண்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மிகவும் பயங்கரமானதாகும். மேலும், சட்ட விரோதமாக செயல்பட்டதற்காக நான்கு பேருக்கு 11 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

அவர்களின் நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் மந்திரி எதிர்ப்பு தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.