கணினி ஊடுருவல்: அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் திருட்டு

அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் பெரியளவில் நடைபெற்ற கணினி ஊடுருவல் ஒன்றில் திருடப்பட்டுள்ள.

இந்த ஊடுருவலின்போது, அரசாங்க ஒப்பந்ததாரர் வசமிருந்த சுமார் 30 ஜிபி அளவிலான தகவல்கள் திருடப்பட்டுள்ளன. அதில், புதிய போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களும் அடங்கும்.

இந்தத் தகவல்கள் வர்த்தக ரீதியிலாக மிக முக்கியமானவை என்றும், ஆனால் ரகசியத் தகவல் கிடையாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. தகவல் திருட்டு சம்பவத்தில் பிற நாடுகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு தெரியவில்லை.

கணினியில் ஊடுருவிய மர்ம நபருக்கு ஆஸ்திரேலிய கணினி பாதுகாப்பு அதிகாரிகள் ‘ஆல்ஃப்’ என்று பெயரிட்டுள்ளனர்.

 

கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த கணினி ஊடுருவல் தொடங்கியுள்ளது. ஆனால், நவம்பர் மாதம்வரை கணினி ஊடுருவல் குறித்து அவுஸ்ரேலியாவின் சமிக்ஞைகள் இயக்குநரகம் எச்சரிக்கை செய்யப்படவில்லை. ஊடுருவிய நபர் குறித்த அடையாளம் தெரியவில்லை.

இந்த தகவல் திருட்டில் ஈடுபட்டவர்கள் பல்வேறு தரப்பினராக இருக்கலாம் என்று அவுஸ்ரேலியாவின் பாதுகாப்பு தொழில் அமைச்சர் கிரிஸ்டோஃபர் பைன் ஏ பி சி செய்தி நிறுவனத்திற்கு இன்று (வியாழன்) அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் திருட்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று தனக்கு உறுதி வழங்கப்பட்டுள்ளதாக பைன் மேலும் கூறினார்.