கிளார்க் அவுஸ்ரேலிய அணிக்கு திரும்புவது அவசியம்!-ஹர்பஜன் கிண்டல்

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல் கிளார்க் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும் என அவுஸ்ரேலியாவின் பேட்டிங் சொதப்பல் குறித்து ஹர்பஜன் சிங் கிண்டல் செய்துள்ளார்.

இந்தியா – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் அவுஸ்ரேலியாவின் பேட்டிங் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது. அந்த தொடரை இந்தியா கடும்போராட்டத்திற்குப் பின் 3-2 எனக் கைப்பற்றியது.

இதனால் தற்போதைய தொடரிலும் அவுஸ்ரேலியா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் பந்து வீச்சை எதிர்கொண்டு அவுஸ்ரேலிய வீரர்களால் ரன்கள் குவிக்க இயலவில்லை. இதன் காரணமாக அவுஸ்ரேலியா தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை 0-3 இழந்துள்ளது.

அவுஸ்ரேலிய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாடி வரும் நிலையில், முன்னாள் கப்டனும் தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன மைக்கேல் கிளார்க் மீண்டும் அவுஸ்ரேலிய அணிக்கு திரும்ப வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கிண்டலாக கூறியுள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மேட், நீங்கள் உங்களுடைய ஓய்வு முடிவை திரும்பெற்று, அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். சகாப்தமான அவுஸ்ரேலியா டாப் பேட்ஸ்மேன்களை உருவாக்கியது முடிந்து விட்டது என நினைக்கிறேன். தரமான பேட்ஸ்மேன்கள் இல்லை’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடருடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற மைக்கேல் கிளார்க், அதே ஆண்டு அவுஸ்ரேலிய – நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரைக் கைப்பற்றியதுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.