2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் அவுஸ்ரேலியா களமிறங்கும்?

பங்களாதேஷ், அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில், எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரில், 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன், அவுஸ்திரேலிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகறது.

இந்திய உபகண்டத்தில், 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் டெஸ்ட் தொடரொன்றை வென்றிருக்காத அவுஸ்ரேலியா, ஓரளவு அழுத்தங்களுடனேயே போட்டிகளில் பங்குபற்றவுள்ளது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்ரேலிய அணியின் பயிற்றுநர் டெரன் லீமன், பங்களாதேஷ் அணியில் சிறப்பான துடுப்பாட்ட வீரர்கள் காணப்படுவதாகவும், தமது சொந்த நாட்டில், சிறப்பான பெறுபேறுகளைக் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

இங்கிலாந்துக்கு எதிரான அண்மைய தொடரில், பங்களாதேஷ் அணி, சிறப்பான பெறுபேற்றை வெளிப்படுத்தியமையைச் சுட்டிக்காட்டிய லீமன், ஆரம்பத்தில் விக்கெட்டுகளைக் கைப்பற்ற வேண்டிய தேவை உள்ளது என்று குறிப்பிட்டார்.

அவுஸ்ரேலிய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக நேதன் லையன் காணப்படும் நிலையில், அஸ்டன் ஏகர், இன்னொரு சுழற்பந்து வீச்சாளராகக் காணப்படுகிறார். அதேபோல், இளம் வீரரான மிற்சல் ஸ்வெப்ஸனும் காணப்படுகிறார். ஏகருக்கும் ஸ்வெப்ஸனுக்கு இடையிலேயே போட்டி காணப்படுவதாக, லீமன் குறிப்பிட்டார்.

ஆனால், அஸ்டன் ஏகரின் சிறப்பான துடுப்பாட்டம், அவரது சிறப்பான களத்தடுப்பு ஆகியன, ஏகருக்கு முன்னிலையை வழங்குவதாகவும் லீமன் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் வைத்து இடம்பெற்ற தொடரில், இடதுகைச் சுழற்பந்து வீச்சாளரான ஸ்டீவ் ஓஃப் கீப் சிறப்பாகச் செயற்பட்ட நிலையில், தற்போது அஸ்டன் ஏகரைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சிறப்பாகச் செயற்படுவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.