கடும் மழையால் அவுஸ்ரேலியாவின் பயிற்சி ஆட்டம் ரத்து!

வங்காள தேசத்தில் கடும் மழை பெய்து வருவதால் அவுஸ்ரேலியா விளையாட இருந்த இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வங்காள தேசம் சென்றுள்ளது.

முதல் போட்டி 27-ந்திகதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஆஸ்திரேலியா விரும்பியது. இதற்கு வங்காள தேச கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த போட்டி டாக்காவில் நாளை தொடங்குவதாக இருந்தது.

தற்போது வங்காள தேசத்தில் கடும் மழை பெய்து வருவதால் மைதானம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவுஸ்ரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமென் கூறுகையில் ‘‘வங்காள தேச கிரிக்கெட் வாரியம் எங்களுக்கு சிறந்த வகையில் ஏற்பாடு செய்து தந்திருந்தது. ஆனால், மழை அந்த வாய்ப்பை கெடுத்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

வங்காள தேச கிரிக்கெட் வாரியம் மாற்று இடத்தை தயார் செய்வதாக கூறியது. ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் அதை மறுத்துவிட்டது.