சமூக வலைதளங்களை ஆளும் விஜய்யின் “ஆளப்போறான் தமிழன்”

மெர்சல்’ படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலான “ஆளப்போறான் தமிழன்” சிங்கிள் டிராக் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் மட்டும் இன்று மதியம் 3.30 மணியளவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பாடலாசிரியர் விவேக் வரிகளில் “ஆளப்போறான் தமிழன்” என்ற வரிகளில் தொடங்கும் இந்த பாடல் சமூக வலைதளங்களில் அதிக அளவில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல் வரிகளும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

தமிழையும், தமிழர்களின் பெருமையையும் வெளிப்படுத்தும் வரிகளும் இடம்பெற்றிருக்கின்றன. பாடல் வெளியானது முதல் பட்டிதொட்டி எங்கும் மாஸ் காட்டி வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு மாஸான விருந்து என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர்.