தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சல்! – சிட்னி விமான தாக்குதல்!

சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வழங்குவவோம் என காவல்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை தனது கட்சிக்காரர் தீவிரவிசாரணையை எதிர்கொண்டுள்ளார் எனவும் அதன் காரணமாக அவர் கடும் அதிர்ச்சிக்கும் மன உளைச்சலிற்கும் உள்ளாகியுள்ளார் எனவும் விடுதலை செய்யப்பட்ட நபரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் எனவும் அவர்களது வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது எனினும் அவர் விரைவில் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்ப விரும்புகின்றார் எனவும் அவரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.