திறன் மிக்க சூரிய ஒளி பலகை!

வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானியான மாத்யூ லம்ப், உலகின் அதி திறன் வாய்ந்த சூரிய ஒளிப் பலகையை உருவாக்கிஉள்ளார்.

சூரிய ஒளியை அதிக பட்சம் பயன்படுத்தி மின்சாரமாக மாற்றும் திறனில் இன்றைய உலக சாதனை 25 சதவீதம் தான். அதாவது, சூரிய ஒளியின் சக்தியில், 75 சதவீதம் வீணடிக்கப்படுகிறது.ஆனால், மாத்யூ உருவாக்கியுள்ள சூரிய ஒளிப் பலகை, சூரிய ஒளியின் திறனை, 44.5 சதவீதம் பயன்படுத்தி அதிக மின்சாரத்தை தயாரிக்கிறது.

வழக்கமான சூரிய ஒளிப் பலகைகள் சூரிய ஒளிக் கற்றையில், நீள அலைவரிசை கொண்டவற்றை உள்வாங்கிக்கொள்வதில்லை. ஆனால், மாத்யூ உருவாக்கியுள்ள பல அடுக்குகளைக் கொண்ட சூரிய ஒளிப் பலகை, காலியம் ஆன்டிமோனைடு என்ற வேதிப் பொருளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

மேலும், இப்பலகையின் மேற்பரப்பில் மிக நுண்ணிய குவி ஆடிகள் பதிக்கப்பட்டிருப்பதால், அதிக அடர்த்தியுள்ள சூரிய ஒளிக் கதிர்கள், கீழே உள்ள சூரிய ஒளி வாங்கிகளைச் சென்றடைகிறது. இதனால், அதிக அளவு மின்சாரத்தை இப்பலகைகள் உற்பத்தி செய்ய முடிகிறது.இந்தியா உட்பட பல நாடுகள் சூரிய சக்திக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்திருப்பதால், இத்தொழில்நுட்பம் விரைவில் உலகெங்கும் பரவிருக்கிறது.