அவுஸ்ரேலியா: கிரிக்கெட் வீரர்களுடனான சம்பள பிரச்சனையால் தென்னாப்ரிக்கா சுற்றுபயணம் ரத்து

அவுஸ்ரேலியா கிரிக்கெட் சங்கம் மற்றும் வீரர்களிடையேயான சம்பள பிரச்சனையால் வீரர்கள் போட்டிகளை புறக்கணித்ததை அடுத்து தென்னாப்ரிக்க சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் சங்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம் வீரர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையில் திருத்தம் செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு அதே சம்பளம் வழங்கவும், மற்ற உள்ளுர் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை நிருத்தி அதை வேறு சில முன்னேற்ற காரியங்களுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டது. அதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து வீரர்களும் கையெழுத்திட கடந்த ஜூன் 30 வரை கால அவகாசமும் அளித்திருந்தது.

ஆனால் அனைத்து வீரர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து கையெழுத்திட மறுத்ததை அடுத்து, ஜூலை 1ம் திகதி முதல் அனைத்து வீரர்களும் வேலையை இழந்ததாக கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. எனினும் வீரர்கள் கிரிக்கெட் வாரியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாமல் இனி வரவிருக்கும் அனைத்து சர்வதேச போட்டிகளையும் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்தனர்.

இதுவரை வீரர்களுக்கும் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால் அவுஸ்ரேலியா ‘ஏ’ பிரிவு அணியின் தென்னாப்ரிக்க சுற்றுபயணத்தை ரத்து செய்வதாக அவுஸ்ரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

அவுஸ்ரேலியா ’ஏ’ பிரிவு அணி இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா ’ஏ’ பிரிவு அணிகளுடன் முத்தரப்பு தொடரில் விளையாடுவதாக இருந்தது. இதனால் இந்த முத்தரப்பு தொடர் நடைபெற வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்த பிரச்சனையால் சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள் உள்ளுர் வீரர்களுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் வேலையை இழந்துள்ளனர். வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான பிரச்சனையால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் அவுஸ்ரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.