இன்று யாழ். குடாநாட்டில் பூரண கர்த்தால்

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும், முதலமைச்சருக்கெதிராக தமிழரசுக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று யாழ். குடாநாட்டில் பூரண கர்த்தால் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதையடுத்து நேற்றைய தினம் முதலமைச்சர் இல்லத்திற்கு முன்னால் அவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே தமிழ் மக்கள் பேரவை இன்று கர்த்தால் அனுட்டிக்க அறைகூவல் விடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று கூடாநாட்டில் மருந்தகங்கள் மற்றும் சில உணவகங்களைத் தவிர அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் என்பன மூடப்பட்டுள்ளன.

இதற்கு, வணிகர் சங்கங்கள், பொது அமைப்புக்கள், ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.