சினிமா ஆசை இல்லாமல் நாயகி ஆனேன்!

சினிமா ஆசை இல்லாமல் நாயகி ஆனதாக ‘குரங்கு பொம்மை’ படத்தின் நாயகி டெல்னா டேவிஸ் கூறியிருக்கிறார்.

பாரதிராஜா, விதார்த் இணைந்து நடிக்க, நித்திலன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குரங்கு பொம்மை’. இதில் நாயகியாக நடித்துள்ள டெல்னா டேவிஸ் படம் பற்றி கூறும் போது…

“எல்லோருக்கும் என்னோட நமஸ்காரம். நான் ஏன் முதலில் மலையாளத்தில் நமஸ்காரம் சொல்கிறேன் என்றால் நான் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்திருக்கிறேன். நான் ஒரு மலையாளி என்பது உங்களுக்கு தெரிவதற்காகத் தான்.

எனக்கு சினிமா ஆசை சுத்தமா மனதில் கிடையாது. ஆனால், எப்படியோ இன்று உங்கள் முன் நடிகையாக நிற்கிறேன். சினிமா நடிகையாக எவ்வளவு நான் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நாளை ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம், கிரிமினல் லாயர் ஆகலாம். அல்லது உங்களைப் போல ஒரு பத்திரிகையாளர் ஆகலாம். ஏனென்றால் அதில்தான் எனக்கு விருப்பம். ஆனால் நாள் எப்படி ஆனாலும் நான் ‘குரங்கு பொம்மை’ கதாநாயகி என்று தான் என்னை முதலில் அறிமுகம் செய்து கொள்வேன். அந்த அளவுக்கு இந்த படம் இருக்கும். எனக்கு அப்படி ஒரு இடத்தை ‘குரங்கு பொம்மை’ வாங்கித்தரும்” என்றார்.