‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் யாரையும் தவறாக சித்தரிக்கவில்லை

சுவாதி கொலை வழக்கு’ படத்தை சமூக அக்கறையுடன்தான் இயக்கியுள்ளதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த வாலிபர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இந்த சம்பவம் ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. ‘உளவுத்துறை’, ‘ஜனனம்’, ‘வஜ்ரம்’ ஆகிய படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்று சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நேற்று போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்திருந்தார். இதற்கு படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் சுவாதியின் கதாபாத்திரத்தை நாங்கள் தவறாக சித்தரிக்கவில்லை. இப்படத்தை சமூக அக்கறையுடன்தான் இயக்கியுள்ளேன். படத்தை எடுத்து முடித்ததும் சுவாதி மற்றும ராம்குமாரின் பெற்றோருக்கு இப்படத்தை திரையிட்டு காட்டுவோம் என்று கூறியுள்ளார்.