அவுஸ்ரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தில் ஈழ அகதிகள்!

அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் ஆபத்தை ஈழம் உள்ளிட்ட அகதிகள் எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தாமலும், அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பிக்காமல் இருப்பவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதி அந்தஸ்த்து கோரி விண்ணப்பிக்காத நிலையில், 7500க்கும் மேற்பட்ட ஈழம் உள்ளிட்ட அகதிகள் அவுஸ்ரேலியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த அனைவருக்கும் ஒக்டோபர் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, குறித்த காலப்பகுதியில் தங்களை நியாயமான அகதிகள் என நிரூபிக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் குறித்த அகதிகள் அனைவரும் நாடுகடத்தப்படுவார்கள் எனவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.