“பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே!” – உருக்கும் வைரமுத்து கவிதை

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக ‘முதல் முதலாய் அம்மாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் ‘கொஞ்சம் தேநீர் நிறைய வானம்’ தொகுப்பில் இந்தக் கவிதை இடம்பெற்றுள்ளது.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தாய்ப்பாசத்தின் அடி ஆழம் வரை பயணிக்கும் அவருடைய கவிதை வரிகள் `அம்மா’ எனும் அற்புதத்தை மீண்டும் ஒருமுறை உணர வைக்கும். பிள்ளை தனக்கு செய்யவேண்டிய கடமையைச் சரியாக நிறைவேற்றாவிட்டாலும், எங்கேயோ இருந்தாலும் `என் பிள்ளை நல்லாயிருக்கணும்’ என்று ஊர்க்கோயிலில் வேண்டுதல் வைக்கிற அந்த அம்மாக்களின் மனம் குளிரும் வண்ணம், அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று நன்றி சொல்ல இந்தக் கவிதை பிள்ளைகளை இழுத்துச் செல்லும்; அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றத் தூண்டும்…

முதன் முதலாய் அம்மாவுக்கு…

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரும
ஒத்தவரி சொல்லலியே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஓங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமப் போனேனோ?

பொன்னையாத் தேவன்
பெத்த பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம்  நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு  வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்குவேற தாயிருக்கா?