53 மணி நேரம் தொடர்ந்து சமையல் செய்து கின்னஸ் சாதனை!

நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர், தொடர்ந்து 53 மணி நேரம் சமையல் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பிரபல சமையல் கலைஞரான விஷ்ணு மனோகர், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி காலை 8 மணிக்கு சமையல் செய்யத் துவங்கினார். தொடர்ந்து 53 மணி நேரம் நடுவர்கள் முன்னிலையில் பல்வேறு சமையல் வகைகளை செய்து காட்டிய அவர், இன்று அதிகாலை 5.30 மணியளவில் பக்கோடா செய்து அதனை நடுவர்களிடம் தந்துவிட்டு தனது சாதனை முயற்சியை முடித்துக் கொண்டார்.

இதற்கு முன்னர் தொடர்ந்து 43 மணி நேரம் சமையல் செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில் அதனைவிட 10 மணி நேரம் அதிகம் சமையல் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் விஷ்ணு மனோகர். இதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுவிட்டன. எனவே கூடிய விரைவில் அவரது பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

”என்னால் இன்னும் பத்து மணி நேரம் கூட தொடர்ந்து சமையல் செய்ய முடியும்.” என கூறியுள்ள விஷ்ணு, இந்த சாதனையை அன்னபூர்ணி அம்மனுக்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சாதனையின் போது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 100 கிராம் எடையுள்ள, 20 பதார்த்தங்களை விஷ்ணு செய்துள்ளார். இந்த உணவு வகைகள் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக, வரிசையாக மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.