மெல்பேர்ண் நகரில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு 2017

பாரததேசத்திடம் இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முப்பதுநாட்கள் உண்ணாநோன்பிருந்து 19-04-1988 அன்று ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது 29-வது ஆண்டு நினைவு தினமும் தாயக விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக உழைத்து சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை நினைவுகூரும் நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வும் உணர்வுபூர்வமாக மெல்பேர்ணில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அவுஸ்திரேலியாவில் தமிழ்த்தேசியப் பரப்பிலும் தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்திலும் உன்னதமான பணிகளை முன்னெடுத்து தமிழீழ தேசத்தின் கனவுகளோடு சாவடைந்து தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் உயர்விருதான மாமனிதர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களும் நினைவுகூரப்பட்டது சிறப்பம்சமாகும்.

பிறெஸ்ரன் நகர மண்டபத்தில் 22-04-2017 சனிக்கிழமையன்று மாலை 6.00 மணியளவில் செயற்பாட்டாளர் திரு கொற்றவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக் கொடியை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு கி. ரகுலேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக் கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர் திரு பா. கோகிலன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி அவர்களது திருவுருவப்படத்திற்கு மூத்த தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திருமதி மனோரஞ்சினி நவரட்ணம் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களது திருவுருவப் படத்திற்கு அவரது துணைவியார் திருமதி யோகா ஜெயக்குமார் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

மாமனிதர் பேராசிரியர் எலியேசர் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது புதல்வன் திரு இரட்ணா எலியேசர் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரன் அவர்களது திருவுருவப்படத்திற்கு அவரது துணைவியார் திருமதி ஞானமலர் மகேஸ்வரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் அன்ரன் பாலசிங்கம் அவர்களது திருவுருவப்படத்திற்கு தமிழ்த் தேசியச்செயற்பாட்டாளர் திரு தயாநிதி அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து பொதுமக்களும் வரிசையாகச்சென்று மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து தாயக விடுதலைப் போராட்டத்தில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களுக்காகவும் போராட்ட காலங்களில் அரசபடைகளாலும் இரண்டகக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மற்றும் நாட்டுப்பற்றாளர்களுக்காகவும் மாமனிதர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அகவணக்கத்தைத் தொடர்ந்து தலைமையுரையும் அதனைத் தொடர்ந்து தியாகத்தாய் அன்னை பூபதி நினைவுசுமந்த பாடலுக்கான வணக்கநடனமும் இடம்ngற்றது. வணக்கநடனத்தை நிருத்தா இந்தியன் நுண்கலைக்கல்லூரி மாணவி செல்வி சக்தி தயாபரன்அவர்கள் வழங்கினார். அடுத்து மாமனிதர் தில்லை ஜெயக்குமார் நினைவாக அண்மையில் வளர்ந்துவரும் இளம்கலைஞன் பிரசாத் அவர்களால் இயற்றிப்பாடிய பாடலை பின்னணி இசையுடன் பிரசாத் அவர்கள் அரங்கிலே மிகவும் உணர்வுபூர்வமமாகப் பாடினார்.

தொடர்ந்து நினைவுரை இடம்பெற்றது. நினைவுரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு சி. நந்தகுமார் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனதுரையில் மாமனிதர் எலியேசர்அவர்கள் அவுஸ்திரேலிய மண்ணில் தமிழ்த்தேசியத்திற்காக ஆற்றிய பணிகளை விலாவாரியாக எடுத்துக்கூறியதோடு, தொடக்கத்தில் இலங்கைத்தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பை தோற்றுவித்து அந்த அமைப்பிற்கு ஊடாக அன்றைய ஆட்சியிலிருந்த தொழிற்கட்சியுடன் பேசி தாயகத்தில் அரசபயங்கரவாதத்தினால் அல்லற்பட்டுக்கொண்டிருந்த பல தமிழ்உறவுகளை அவுஸ்திரேலியாவுக்கு வரவழைத்ததன் பயனாக அவர்களது குடிப்பரம்பலே இன்று அவுஸ்திரேலியாவில் பல ஆயிரக்கணக்கில் தமிழ்மக்கள் வாழ்வதற்கு வழிசமைத்தது என்றும் இங்குள்ள இந்துக்கோவிலகள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் அனைத்திலும் மாமனிதர் எலியேசரின் சிந்தனைகள் செயல்வடிவமாகியிருக்கின்றன. என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து மாமனிதர் தில்லை ஜெயக்குமார்அவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் மிகவும் அமைதியான சுபாவமுடையவர் என்றும் இரவு பகல்பாராது தமிழ்த் தேசியத்திற்காக அயராது உழைத்தவரென்றும் அவர் தனக்குவருகின்ற அனைத்து தொலைபேசி அழைப்புக்களிற்கும் மிகவும் பொறுமையுடன் பதிலளிப்பவரென்றும் தேசியத்திற்கான பணியை மிகவும் நேர்த்தியுடன் முன்னெடுத்தவரென்றும் குறிப்பிட்டார்.

அடுத்து நாட்டுப்பற்றாளர் மகேஸ்வரனைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர் ஒரு மருத்துவராக இருந்தபோதிலும் இசைத்துறையை ஆழமாக நேசித்தவரென்றும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தியாகத்தாய் அன்னை பூபதி நினைவு தினத்திற்கு இசைக்கச்சேரி ஒன்றை அரங்கேற்றியிருந்தார் என நினைவுகூர்ந்ததோடு தாயகத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு ஊடாக இசைத்துறையை ஊக்குவிக்கும் புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கான நிதியத்தையும் இங்கு ஆரம்பித்து தான் மறையும்காலத்தில் அந்த நிதியத்தின் பொறுப்பை தனது மனைவி பிள்கைளிடத்திலேயே விட்டுச்சென்றுள்ளார் என்பதையும் குறிப்பிட்டார்.

2009-ம்ஆண்டிலிருந்து சமகாலம்வரையிலும் தமிழ்த் தேசியச்செயற்பாடுகளில் முழுமையாக தங்களை அர்ப்பணித்து அமரத்துவமடைந்தவர்களான சோமசுந்தரம் கதிர்காமத்தம்பி மற்றும் பவளராணி ஆகியோர்களையும் நினைவுகூர்ந்து அவர்களின் நினைவுகளைச்சுமந்து எமது பணிகளை முன்னெடுப்போம் என தனது நினைவுரையில் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து தியாகத்jha; அன்னை பூபதி அவர்களது நினைவுகளையும் சமகாலநிகழ்வுகளையும் உள்ளடக்கியதான காணொளிப்பதிவு அகலத்திரையில் திரையிடப்பட்டது.

அடுத்து ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கிடையில் நடைபெறும் அன்னை பூபதி நினைவுதின பொது அறிவுப்போட்டி இடம்பெற்றது. இதில் சங்கிலியன் அணி மற்றும் எல்லாளன் அணி என இரண்டு அணிகளுக்கிடையில் மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இப்பொதுஅறிவுப்போட்டியில் சங்கிலியன் அணி 51 புள்ளிகளைப்பெற்று முதலாவது இடத்தையும் எல்லாளன் அணி 43 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் (giftcard) வழங்கி கெளரவிக்கப்பட்டது. இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற உறுதிமொழியோடு இரவு 8.00 மணியளவில் நாட்டுப்பற்றாளர்நாள்- 2017 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

AG1A4440

AG1A4442

AG1A4445

AG1A4450

AG1A4452

AG1A4453

AG1A4456

AG1A4457

AG1A4466

AG1A4472

AG1A4477

AG1A4485

AG1A4487

AG1A4494