தனுஷ் மீது உரிமை கோரும் வழக்கு: மருத்துவர்கள் அறிக்கையில் புதிய தகவல்

தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

வழக்கு விசாரணையின் போது கதிரேசன் -மீனாட்சி தரப்பில் சில சான்றிதழ்கள் தாக்கல் செய்யப்பட்ட‌ன. இந்த சான்றிதழ்களில் உள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளனவா? என கண்டறிய அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மார்ச் 2 ஆம் தேதி தனுஷ் நேரில் ஆஜரானார்.

இந்நிலையில், தனுஷ் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. மதுரை அரசு மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். தனுஷ் உடலில் இருந்து சில அங்க அடையாளங்கள் லேசர் கருவி மூலம் அழிக்கப்பட்டதாக, மருத்துவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து விரிவான விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்தது.