கோலி படத்தை விலங்குகளுடன் வைத்து போலிங் நடத்திய அவுஸ்ரேலியா மீடியா

இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையில் அதிக அளிவில் ஸ்லெட்ஜிங் நடைபெற்றது. உச்சகட்டமாக டி.ஆர்.எஸ். முறையை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் தவறாக பயன்படுத்தியதால், அந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். ‘சீட்டிங்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவர் செயல் இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், ‘‘அந்த நேரத்தில் என்னுடைய புத்தி மழுங்கி விட்டது. நான் டிரஸ்ஸிங் ரூம் வீரர்களை அணுகியிருக்கக்கூடாது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரச்சினை இரு கிரிக்கெட் வாரியம் வரை விரிவடைந்து, பின்னர் பத்திரிகைகள் கைகளுக்குச் சென்றது. பெரும்பாலான ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இந்திய அணி கேப்டன் விராட் கோலியை மிகவும் தரக்குறைவாக எழுதி வருகிறது.

தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஸ்போர்ட்ஸ் ஊடகமான ‘பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் அவுஸ்ரேலியா’, தனது சமூக வலைத்தளத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில் விலங்குகளுடன் விராட் கோலியின் படத்தை வைத்து கேலி செய்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு பார்முலா 1 கார் பந்தயத்தில் ஆஸ்தி்ரேலிய அணியின் மார்க் வெப்பரிடம் இருந்து ஜெர்மனி வீரர் செபஸ்டியான் வெட்டல் போல் நிலையைக் கைப்பற்றினார். அப்போது ‘வெட்டல் ஆஃப் தி வீக்’ போலிங் போட்டியை பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் அவுஸ்ரேலியா தொடங்கியது.

அதேபோல் தற்போது பெங்களூரு டெஸ்டில் நடைபெற்ற டி.ஆர்.எஸ். முறையை வைத்து ‘வெட்டல் ஆஃப் தி வீக்’ போலிங் போட்டியை நடத்தியது.

அதில் நான்கு படத்தை பிரசுரித்திருந்தது. அதில் விராட் கோலியின் படத்துடன் பூனை, நாய் பாண்டா கரடி ஆகியவற்றின் படத்தை வைத்து நான்கு படமும் ஒவ்வொரு முகப்பாவனையுடன் இருப்பதுபோல் பிரசுரித்தது.

அதற்கு கீழ் ‘‘சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு எங்களை மீண்டும் வெட்டல் ஆஃப் தி வீக் விருதிற்கு தூண்டியது. குழந்தைகளே, உங்களது தாத்தா பாட்டியிடம் கேளுங்கள். இதைப் பற்றிய மற்ற விவரங்கள் உங்களுக்குத் தெரியும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. எனினும், அவுஸ்ரேலியா ஊடகம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.