தணிக்கை குழுவினர் உடனடியாக வெளியிட சொன்ன நிசப்தம் படம் !

சமீபகாலமாக குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகரித்துள்ளது. அப்படியான ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது நிசப்தம்.

சமீபத்தில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினரே கண்கலங்கி உள்ளனர். “படத்தை உடனே ரிலீஸ் பண்ணுங்க நாலு பேராவது திருந்துவாங்க” என்று சொல்லி யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

“இன்றைய சூழலில் சிறுமிகள் ஹாசினி, ரித்திகா, இளம்பெண்கள் நந்தினி, பாவனா ஆகியோர்களுக்கு ஏற்பட்ட நிலைகளை அறியும் பொழுது பெண் சமூகத்தின் மீது படர்ந்துள்ள கொடும் இருளை நீக்க வேண்டிய சூழல் ஒவ்வொரு மனிதருக்குமான மனித நேய கடமை என்றே உணர்த்துகிறது.

இதை பிரதிபலிக்கும் விதமாகவே நிசப்தம் உருவாகி உள்ளது. அபிநயாவிற்கு இப்படம் மூலம், அவர் சாவித்திரி, ரேவதி போன்று ஒரு சிறந்த நடிகை என்ற மற்றொரு பரிமாணத்தை உணர்த்தும். பேபி சாதன்யா, இப்படம் மூலம் அனைத்து தரப்பு குடும்பங்களிலும், மனங்களிலும் ஓர் மகளாக வாழ்வாள்” என்கிறார் இயக்குனர் மைக்கேல் அருண்.மிராக்கள் பிக்சர்ஸ் என்கிற புதிய பட நிறுவனம் மூலமாக ஏஞ்சலின் டாவென்ஸி தயாரிக்கிறார்.

அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். எஸ்.ஜே.ஸ்டார் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ஜஸில் இசை அமைக்கிறார். மிராக்கள் பிக்சர்சுடன் இணைந்து பிஹைன்ட் த சீன்ஸ் என்ற நிறுவனம் இம்மாதம் வெளியிடுகிறது.