பெண்களின் பாதுகாப்பாக புதிய பிரச்சாரம்!

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்துவரும் குற்றங்களிலிருந்து அவர்களை காப்பதற்காக நடிகை வரலட்சுமி சரத்குமார் புதிய பிரச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார்.

நடிகை பாவனா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது நாடெங்கும் பெரிய அதிர்வலையை உண்டாக்கியுள்ளது. பாவான தைரியமாக இந்த விஷயத்தை வெளியில் சொன்னதையடுத்து மேலும் ஒரு சில நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

அந்த வரிசையில் நடிகை வரலட்சுமியும், தானும் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தினார். வரலட்சுமியின் பதிவு செய்த இந்த டுவிட்டருக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களை பாதுகாக்கும் பொருட்டு வரலட்சுமி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கப்போவதாக வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘சேவ் சக்தி’ என்ற பெயரில் கையெழுத்து பிரச்சாரம் ஒன்றை உலக மகளிர் தினமான மார்ச் 8-ந் திகதி தொடங்கவுள்ளேன். இந்த கையெழுத்து பிரச்சாரத்தில் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து அனைவரிடமும் கருத்து கேட்க உள்ளோம்.


அதாவது, தமிழகத்தில் பெண்களுக்கான சட்டத்திட்டங்களை அதிகப்படுத்தவேண்டும். பெண்களுக்கு எதிரான வழக்கில் குறிப்பிட்ட தேதிக்குள் தீர்ப்பு வழங்கவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்திதான் இந்த கையெழுத்து பிரச்சாரத்தை நடத்தவுள்ளோம்.

மார்ச் 8-ந் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த கையெழுத்து பிரச்சாரத்தை நடத்தவுள்ளேன். இது நடிகைகளுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் நடத்தப்படவுள்ளது. இதில் கூறப்படும் கருத்துக்களை நமது மாநில அரசின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இதன்மூலம், பெண்களுக்கான பாதுகாப்பை ஓரளவுக்கு உறுதி செய்யமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்