அவுஸ்திரேலியாவில் கணவனை கொன்ற பெண்! நன்னடத்தையால் விடுதலை

கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவப் பெண் சாமரி லியனகே, இந்த வாரம் விடுதலை செய்யப்படவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இலங்கைப் பெண்ணின், நன்னடத்தை காரணமாகவே அவர் விடுதலை செய்யப்படவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த இலங்கை மருத்துவப் பெண், தனது கணவனை கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.

இந்த குற்றச்சாட்டு காரணமாக குறித்த பெண்ணுக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

குறித்த பெண் மருத்துவரின் கணவர், சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்தமையாலேயே இலங்கைப் பெண் தன் கணவரை சுத்தியலால் தாக்கி கொலை  செய்துள்ளார்.

இதேவேளை, சிறைத் தண்டனை நிறைவடைந்த பின்னர்,சாமரி லியனகேவை நாடு கடத்துமாறு அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இருப்பினும், தன்னை நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு குடிவரவு அமைச்சரிடம் சாமரி லியனகே கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை ரத்துச் செய்யப்பட்டிருந்த சாமரி லியனகேயின் விசாவை மீள புதுப்பித்து தருவதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், மீளாய்வு மேற்கொண்டு சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரெலியாவில் தங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.