தமிழர்கள் தமது விவகாரங்களை கையாள அனுமதிக்கப்பட வேண்டும்: சம்பந்தன்

பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் தமது விவகாரங்களைத் தாமே கையாள அனுமதிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் நீதித்துறைக் குழுவின் தலைவரான பொப் குட்லட் தலைமையிலான எட்டு நாடாளுமன்ற குழுவினரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.

மேலும், இதன் போது, 30 வருடங்களாக நடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாத்தியமான வழிகளில் அமெரிக்க உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு, அமெரிக்க நாடாளுமன்றக் குழுவினர், தமிழ் மக்களின் நிலைப்பாட்டை அமெரிக்காவில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், இலங்கை அதிபரைச் சந்திக்கும் போதும் தெரியப்படுத்துவதாக உறுதியளித்தனர்.

45 நிமிடங்களாக இடம்பெற்ற இச்சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.