“எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை” அசேலவின் தாய், தந்தை உருக்கம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி இறுதி தருணத்தில் மலிங்க தனக்கு எவ்வாறான ஆலோசனைகளையும், உற்சாகத்தையும் வழங்கினார் என அசேலவும் மனந்திறந்துள்ளார்.

அசேல குணவர்தன தொடர்பில் அவரது தாய், தந்தை தெரிவிக்கையில்,

தாய்,

“நேற்றுமுன்தினம் போட்டியில் வெற்றிபெற்றமையானது சொல்ல முடியாதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது மகனை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகின்றேன். யுத்தக்காலத்தில் நாம் போகவேண்டாம் என்று கூறியும் அவர் யுத்தத்துக்கு சென்றார். இன்று போட்டியை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு ராஜாவை போல் ஆகியுள்ளார்.”

தந்தை,

எனது மகன் இவ்வளவு பெரிய திறமைக்கொண்டவர் என நான் நினைக்கவில்லை.. சந்தோஷத்தை எப்படி விவரிப்பது என எனக்கு தெரியவில்லை… வீதிக்கு செல்லும் போது மக்கள் “ நாட்டுக்கு ஒரு பிள்ளையை பெற்றுள்ளீர்கள், நேற்று துடுப்பெடுத்தாய விதத்தை பாருங்கள்” என்று கூறும்போது எனது மகிழ்ச்சிக்கே அளவில்லை என்றார்.

அசேல குணவர்தன கருத்து தெரிவிக்கையில்,

போட்டியின் போது எமது அணி விக்கட்டுகளை அடுத்தடுத்து இழந்துக்கொண்டிருந்தது.

இதன்போது நானும் சாமர கபுகெதரவும் களத்தில் நின்றோம். நாம் இன்னும் 10 ஓவர்களுக்கு ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும் என்று திட்டமிட்டோம். எனினும் சாமர துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் 5 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது களத்துக்கு வந்த மலிங்க என்னை உற்சாகப்படுத்தினார். எனக்கு முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

ஓட்டங்களை ஓடி பெற வேண்டாம் என்றும் தனியாளாக உன்னால் ஓட்டங்களை பெறமுடியும் என்றார்.

அதுமாத்திரமின்றி ஒவ்வொரு பந்தின்போதும் என்னை உற்சாகப்படுத்தினார். இறுதியில் 3 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில், உன்னால் அடிக்க முடியும், ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாட வேண்டும், நீ ஆட்டமிழந்தால் உன்னால் முடியாது என்று ரசிகர்கள் நினைப்பார்கள் என உற்சாகப்படுத்தியதாக” அசேல தெரிவித்தார்.