ரணிலின் பெயருக்கு முன் கலாநிதிப்பட்டம் பயன்படுத்தத் தடை!

அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நேற்றையதினம் கீலோங்கிலுள்ள டீக்கின் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

குறித்த பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜோன் ஸ்ரான்ஹோப் இந்தப் பட்டத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கினார்.

நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் மற்றும் பிரதமராக இருந்து நாட்டின் கல்வி, பொருளாதார நிலை, மனித உரிமைகள் நிலையை உயர்த்துவதற்காக பாடுபட்டுவருவதற்காகவே இக்கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இக்கௌரவிப்பு பட்டமளிப்பு விழா நடைபெற்றதன்பின்னர், இந்த கலாநிதி பட்டத்தை, அதிகாரபூர்வ அல்லது தனிப்பட்ட விடயங்களில் தனது பெயருக்கு முன்பாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு, பிரதமரின் செயலர் சமன் எக்கநாயக்கவுக்கு, சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.