மட்டு எழுக தமிழில் அனந்தி கலந்துகொள்ளத் தீர்மானம்!

மட்டக்களப்பில் எதிர்வரும் 10.02.2017 அன்று நடைபெற உள்ள எழுக தமிழ் நிகழ்வில் கலந்து கொள்ள வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தீர்மானித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் பூ.லக்ஸ்மன் அவர்களுக்கும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கும் இடையில் நேற்று மாலை யாழ் நகரில் நடைபெற்ற சந்திப்பின் போது இது தொடர்பாக உத்தியோக பூர்வமாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் காணாமல் போனவர்களுக்கானதும் இறுதி யுத்த காலப்பகுதியில் படையினரிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கான தீர்வையும் நீதியையும் வலியுறுத்தி எழுக தமிழ் பேரணியில் அனந்தி சசிதரன் தலைமையில் யாழ் மாவட்டத்தில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் கலந்துரையாடப்பட்டது.

அரசியல் தீர்வை அடைந்து கொள்வதற்காக தமிழ் மக்கள் பேரவை செயற்படுவது போல காணாமல் போனவர்களுக்கான நீதியையும் பெற்று கொள்வதற்கு தமிழ் மக்கள் பேரவை முன்னின்று உழைக்க வேண்டும் என்றும் அனந்தி சசிதரன் வலியுறுத்தினார்.