எனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம் – வீழமாட்டோம்!

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் சோஷலிஸம் முடிவிற்கு வர, உலகமயமாக்கல் (Globalosation) எனும் முதலாளித்துவ (Captilasm) குதிரையில் ஏறி இந்தியா, சீனா, பிரேஸில், மலேசியா உட்பட பல வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 1970களில் யுத்தத்தால் அழிவடைந்த வியட்நாமும் பங்களாதேஷும் கூட இந்த பயணத்தில் இணைந்து பயனடைய தொடங்கி விட்டன.

1977ல் திறக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தால் நன்மையடைய வேண்டிய தமிழினத்தை பேரினவாதம் திட்டமிட்டு அழித்த வரலாறே 1983 இனக்கலவரம். அன்றிலிருந்து இருபத்தாறு ஆண்டுகள் நாங்கள் யுத்தத்தில் அழிவுகளை சந்தித்தது மட்டுமல்லாமல் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களையும் தவறவிட வைக்கப்பட்டோம். ஒரு புறத்தில் எங்கள் பொருளாதாரமும் வாழ்க்கை தரமும் பின்னோக்கி செல்ல, சிங்களவர்களும் முஸ்லீம்களும் தங்களை பொருளாதார, கல்வி, சமூக ரீதியாக பலப்படுத்திக் கொண்டு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களை தமதாக்கிக் கொண்டார்கள்.

நாங்கள் மீண்டும் ஒரு பலமிக்க இனமாக மீளெழ எங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். யுத்தம் முடிவடைந்து கடந்த ஏழாண்டுகளில் எங்கள் ஒட்டுமொத்த சக்தியும் தேர்தல் களங்களிலும் அவை ஏற்படுத்திய வெற்று நம்பிக்கைகளிலும் சர்வதேசத்தின் பால் வைத்த நம்பிக்கையிலும் கரைந்து விட்டது என்பது கசப்பான உண்மை.

———————

நம்மில் பெரும்பாலானோர் கடும் அரசியல் பேசி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்க மண்ணில் இளைய தலைமுறை சுயமாக தொழில் முயற்சிகளை ஆரம்பித்து வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, தம்மையும் வளமாக்கி சமுதாயத்திற்கும் பலனளிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதை நேரடியாக காணும் வாய்ப்பை கடந்த தாயகப் பயணம் தந்தது. அளவில் சிறியளவிலான இம்முயற்சிகளிற்கு ஒரு சமூகமாக நாங்கள் தரப்போகும் ஆதரவும் ஊக்கமும் இது போன்ற பல முயற்சிகளுக்கு நிட்சயமாக விதையாக அமையும்.

—————-

மெல்பேர்ணை தளமாகக் கொண்டியங்கும் நண்பன் ஜெயபிரகாஷின் JeyLabs நிறுவனம், சட்டநாதர் கோவிலடியில் Ceymplon என்ற பெயரில் தனது யாழ்ப்பாணக் கிளையை ஆரம்பித்துள்ளது. தமிழர்களால் தமிழர்களைக் கொண்டு யாழ்ப்பாண்தில் இயங்கும் மென்பொருள் (software) நிறுவனமான Ceymplon, IT கற்கை நெறிகளில் ஈடுபடும் மாணவர்களிற்கு பயிற்சி (internship) வசதிகளையும் வழங்கி வருகிறது.

இருபதிற்கு மேற்பட்ட இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள இந்நிறுவனம், வட மாகாண சபையின் சுற்றுலா இணையத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

புலத்தில் நமக்கு தெரிந்த மென்பொருள் சம்பந்தமான வேலைத்திட்டங்களை (software development projects) இந்த நிறுவனத்திற்கு அளிப்பதன் புலம், இந்த சிறிய நிறுவனத்தை மேலும் பலமாக்கி, பெங்களூர், சென்னை போல் யாழ்ப்பாணத்தையும் ஒரு software hub ஆக்க நாங்கள் துணை நிற்கலாம்.

www.ceymplon.lk

மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலை தாண்டி ஒரு ஒழுங்கைக்கால விட்டு புதிதாக அமைக்கப்பட்டுள்ள சேதன முறை விவசாய பண்ணை (organic farm) ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கண்காளராக வேலை செய்த சசி, இந்தப் பண்ணையை நடாத்துகிறார். சசியும் ஒரு ஜொனியன். மாடு, கோழி, வாத்து, மண்புழு, காளான், வாழைமரம், மரக்கறி என தோட்டம் நிரம்பியள்ளது. மாட்டின் சாணத்தை வைத்து எரிவாயுவும் தயாரிக்கப்படுகிறது, மிஞ்சிய சாணம் பயிர்களிற்கு உரமாகவும் பயன்படுகிறது. யாழ்ப்பாணத்தில் சேதன முறை விவசாயத்தின் முன்னோடியான “ஜொனியன்” ஜூட் ஜோசப் அண்ணாவின் ஆலோசனகளை உள்வாங்க தம்பி சசி ஆவலோடு காத்திருக்கிறார்.

—————–

சென்னை ரங்கநாதன் தெருவில் போய் மனிசி சாரிகள் வாங்கும் போது வரும் கடுப்பு, இந்த முறை கிளிநொச்சியில் மனிசி சாரி வாங்கும் போது வரவில்லை. “எவ்வளவு வேண்டுமென்றாலும் வாங்கு ராசாத்தி” என்று பர்ஸை கொடுத்து விட்டு, ஸ்டூலில் உட்கார்ந்து விட்டேன். கிளிநொச்சியில் மனிசி வாங்கின சேலைகள் அனைத்தும் துணுக்காயிலும் பாண்டியன்குளத்திலும் இயங்கும் கைத்தறி தொழிற்சாலைகளில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எங்கட பெண்கள் நெய்த சேலைகள்.

<

கொஞ்சம் கொஞ்சமாக தலைநிமிர முயற்சிக்கும் என்னினத்தை நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டிருந்த தருணத்தில் “பிக் மேட்சிற்கு வந்த போது கொழும்பில் நீர் வாங்கின சாரிகளை விட, இந்த சாரிகள் எவ்வளோ better” என்று மனிசி திட்டியதும் காதில் சரியாக விழவில்லை.

யாழ்ப்பாணத்தில் நாங்க நிற்கும் போது சுண்டுக்குளி மகளிர் கல்லூரி 1995 batch தங்களுடைய reunion நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடாத்திக் கொண்டிருந்தார்கள். கல்லூரியில் நடந்த ஆசிரியர்களிற்கான கெளரவிப்பு நிகழ்விற்கு பல நாடுகளிலிருந்து வந்திருந்த அப்போதைய 1995 batch பெட்டைகள் (இப்போ அன்டிமார்) எல்லோரும் துணுக்காயில் நெய்த ஒரே டிசைனிலான கறுப்பு சிவப்பு கைத்தறி சேலைகளை அணிந்து சென்று மண்ணை மகிமைப்படுத்தினார்கள்.

Viberல் படம் அனுப்பி postல் வெளிநாட்டுக்கும் அனுப்பி வைப்பார்களாம். உங்கள் அடுத்த கைத்தறி சேலை வாங்க +94 (76) 315 0020ல் தொடர்பு கொள்ளுங்கள்.

——————–

“தமிழன்டா”, “வீழ்வேனென்று நினைத்தாயோ” போன்ற உணர்வு பொங்கும் வாசகங்களை தாங்கியும், அழகாக பெடியளிற்கு பிடித்த மாதிரி T’Shirt வடிவமைப்பது தம்பி அக்சரனின் AkiY TeeS நிறுவனம். பரி யோவான் கல்லூரியின் 1988 batch தங்களது reunionக்கான T’Shirtகளை தன்னிடம் வடிவமைத்ததையிட்டு பெருமிதம் கொண்டார் அக்சரன். நல்லூர் பின் வீதியில் அவரது வீட்டின் ஒரு பாகத்தில் இயங்கும் அக்சரனின் அலுவலகம், விரைவில் சொந்தமாக ஒரு தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ள செய்தி இனித்தது.

Facebook மூலமாக ஓடர் செய்யும் வசதிகளை ஏற்படுத்தியுள்ள அக்சரனின் முயற்சிக்கு ஆதரவளிக்க மனமிருந்தாலே போதும்.  நாம் பணியாற்றும் நிறுவனங்கள், பங்கு கொள்ளும் கழகங்கள், ஒன்றுகூடும் நிகழ்வுகள் என்று எத்தனையோ தேவைகளிற்கு தென்னிலங்கையில் தயாரிக்கும் T’Shirtகளை வடக்கில் இயங்கும் நம்மவர் ஒருவரிற்கு கொடுப்போம், நமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப துணை நிற்போம்.

பரி யோவான் கல்லூரியில் படித்த ஜொனியன்ஸிற்கு Big Matchற்கு சிவப்பு கறுப்பு நிறங்களில் விதம் விதமாக T’shirt மற்றும்  தொப்பிகள் வடிவமைத்து பிரபலமான தம்பி அக்சரனின் தமிழ் மணம் மணக்கும் T’shirt வாங்கலாம் என்று உச்சி வெய்யிலில் அவரின் வாசலில் போய் நின்றால், அவரின் பதில் கோபத்தை கொப்பில் கொண்டு போய் வைத்தது

“அண்ணே, extra large sizeல் நான் கனக்க T’Shirt அடிக்கேல்ல.. அடிச்சது முடிஞ்சுது.. நீங்க மெலியுங்கோண்ணே.. மெலிஞ்சா விஜயைப் போல இருப்பீங்களண்ணே”

“டேய்.. தமிழன்டா.. … மெலிவேன் என்று நினைத்தாயோ…குண்டா கறுப்பா இருந்தால் தான் தமிழன்டா…”

<

————–

“எங்கேயடா எங்கட யாழ்ப்பாண பணியாரங்கள் சாப்பிடலாம்” என்று கேட்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியடியில் இயங்கும் தம்பி ஜீவதர்ஷனின் மாருதம் உணவகத்தினை நோக்கி கையை காட்டினார்கள். கல்லா பெட்டிக்கு பின்னால் நின்ற காற்சட்டை போட்ட சிங்கம் சிரித்துக் கொண்டே வரவேற்க, நிமிர்ந்து பார்த்தால், சுவரில் எழுதியிருந்த வாசகங்கள் பெருமிதம் கொள்ள வைத்தன.

<

“தம்பி, சூசியம் ஒன்று தாடா..”

“அண்ணே, வந்தது காலம்பறயே முடிஞ்சுது”

“அப்பன் வாய்ப்பன் இருக்கோ..”

“இப்ப வந்திடும் எப்பன் பொறுங்கோ.. ”

“அப்ப இப்ப குடிக்க பப்பா ஜூஸ் தாடா”

“டேய்.. அண்ணேக்கொரு பப்பா போடு.. உரும்பிராய் பப்பா பழத்தை போட்டடி”

“அப்படியே ஒரு போளியும் தாங்க ராசா”

“இங்க இப்ப போலிகள் மலிஞ்சு போச்சண்ணே”

நான் பப்பா ஜூஸை உறிஞ்சிக் கொண்டே போளியை கடிக்க, தம்பி ஜீவதர்ஷன் யாழ்ப்பாணத்தின் மரக்கறி சந்தை நிலவரம், யாழில் தம்புள்ளை சந்தை செலுத்தும் தாக்கம், மரக்கறி விலை ஏற்ற இறக்க காரணிகள், கடலுணவு சந்தை நிலவரம், கொழும்பிற்கு ஏற்றப்படும் நண்டுகள் என்று யாழ்ப்பாண பொருளாதாரம் பற்றி ஒரு குட்டி விரிவுரையே நடாத்தினார்.

அடப்பாவி, எந்த நேரமும் ஃபேஸ் புக்கில் அரசியல், கிரிக்கெட், சினிமா என்று கலாய்த்துக் கொண்டிருக்கும் உன் விரல் நுனியில் யாழ்ப்பாணத்தின் பொருளாதார புள்ளிவிபரங்கள் சுற்றியிருப்பதை பார்த்து அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லையடா.

“தம்பி, ஒரு நெல்லி ஜூஸ் அடிக்கலாமா”

“ஒமண்ணே, பின்னேரமா வாங்கோண்ணே, மிதிவெடி தயாராயிருக்கும்”

————————

நாம் பொருளாதார ரீதியாக பலமாக இருந்த 70களின் காலப்பகுதியே அரசியல் ரீதியாக துணிந்து குரல் கொடுக்கும் துணிவை நமக்கு தந்தது. புலத்தில் நாமடைந்த பொருளாதார செழிப்பே எந்த நாட்டின் ஆதரவுமின்றி ஆயுத போராட்டத்தை முன்னெடுக்க வழியமைத்தது. அரசியல் உரிமைக்காகவும் நீதிக்காகவும் போராடிக் கொண்டே அழிவடைந்து போயுள்ள எங்கள் பொருளாதாரத்தையும்  கட்டியெழுப்ப முனைப்புடன் செயற்பட வேண்டிய காலத்தில் நாங்கள் வாழ்கிறோம்.

தாமும் தலை நிமிர்ந்து தமிழர் பொருளாதாரத்தையும் தலைநிமிர வைக்க முயற்சிக்கும் இந்த சிறு முயற்சிகளிற்கு தோள் கொடுப்பது நமது காலத்தின் கடமை.

வீழ மாட்டோம் நாம்

வீழ மாட்டோம்

வீழ விடமாட்டோம் நம்மவர்

வீழ விடமாட்டோம்.

நன்றி-  http://kanavuninaivu.blogspot.com.au