இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி

இளைஞர்களின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை நகரில் திரும்பிய திசை எல்லாம் ஆங்காங்கே இளைஞர்கள் மற்றும் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடையை நீக்கி அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மதுரையில் நான்காம் தமிழ் சங்கம் செந்தமிழ் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க நடிகர் பாக்கியராஜ் மதுரை வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு தடை நீக்கத்திற்கு தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவ- மாணவிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அறிவிப்பு என்பது தமிழக இளைஞர்களின் எழுச்சி போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இவ்வாறு அவர் கூறி னார்