தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ பட நாயகி பார்வதி நாயர் தான் தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பார்வதிநாயர். இவர் நாளை வெளியாகும் ‘கோடிட்ட இடங்களை  நிரப்புக’ படத்தில் நடித்திருக்கிறார்.

பார்த்திபன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் சாந்தனுவுடன் நடித்த அனுவம்பற்றி கூறிய பார்வதி நாயர்…

“இந்த படத்தில் ‘மோகினி’ என்ற மலையாள பெண் கதாபாத்திரத்தில் எந்த வித ஒப்பனையும் இல்லாமல் நடித்து இருக்கிறேன்.  பார்த்திபன் சார் எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்து, என்னுள் இருக்கும் நடிப்பு திறமையை மிக அழகாக வெளி கொண்டு வந்து  இருக்கிறார். ஒத்திகை எதுவும் இல்லாமல் ஒரு மாத காலத்தில் நாங்கள் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தின் படப்பிடிப்பை  நிறைவு செய்து இருக்கிறோம்.

இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களிலேயே, இந்த மோகினி கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.  என்னுடன் இணைந்து பணியாற்றிய சாந்தனு, எனக்கு பக்கபலமாய் இருந்தார். இந்த படத்தில் நிச்சயமாக எங்கள் இருவரின்  நடிப்பும், பொருத்தமும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெறும் என்று பெரிதும் நம்புகிறேன். தமிழ்நாட்டில் தங்கி இருந்து, தமிழ் படத்தில் நடித்திருப்பது என்னை ஒரு தமிழ் பெண்ணாகவே மாற்றி இருக்கிறது. நாளை கோடிட்ட இடங்களுக்கு ரசிகர்கள்  எழுத இருக்கும் பதிலுக்காக ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்” என்றார்.