திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

திமுகவின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்வு செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்மொழிய தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

அப்போது அன்பழகன், “திமுக செயல் தலைவராக ஸ்டாலின் ஏக மனதாக தேர்வு செய்யப்படுகிறார். அவர் தற்போது வகித்துவரும் பொருளாளர் பதவியையும் கூடுதலாக கவனிப்பார்” எனத் தெரிவித்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு இன்றைய பொதுக்குழுவில் வெளியிடப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு தொடங்கிய பொதுக்குழு கூட்டம் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

16 தீர்மானங்கள் நிறைவேற்றம்:

1. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென அறிவித்து கோடிக்கணக்கான ஏழை – எளிய மக்கள் மீது பொருளாதாரப் போர் தொடுத்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை இந்தப் பொதுக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

2. தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான பணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

3. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு நிகரான ஊதியம் மாநில அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும் வகையில் தமிழக அரசு மேலும் தாமதிக்காமல் உடனடியாக ஊதியக்குழுவினை நியமித்திட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

4. தமிழகத்தை ‘வறட்சி மாநில’மாகஅறிவித்து, உரிய நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

5. சென்னை மாநகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைப் பெருமளவு குறைத்திடவும், சென்னை துறைமுகத்தின் பணிகள் தடையின்றி நடைபெறவும் பெரிதும் உதவிடும் இத்திட்டம் விரைந்து நிறைவேறிட மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

6. நீட் தகுதித் தேர்வு முறையை ரத்து செய்து, அந்தந்த மாநில அரசுகள் தாங்கள் ஏற்கனவே கடைபிடித்து வந்த மாணவர் சேர்க்கை முறையையே மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

7. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை ‘தேசியக் கல்விக் கொள்கை’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தி, மாநில உரிமைகளில் ஊடுருவி மாநிலங்களின் கல்வித் திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முற்படும் பிற்போக்கு முயற்சியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட்டுவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

8. ஆண்டுதோறும் கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபாடு செய்துவருவதைப் போல், இந்த ஆண்டும் எவ்வித எண்ணிக்கை உச்ச வரம்பும் இன்றி, விருப்பமுள்ளோர் அனைவரும் சென்று வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் வழிவகை செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

9. தமிழக மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதையும், படகுகளைக் கைப்பற்றுவதையும் தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

10. லாபத்தில் இயங்கும் சேலம் இரும்பாலை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்று, யாரோ ஒரு முதலாளி லாபமடைந்து கொழுக்கவும், பொதுத் துறை நிறுவனம் மக்கி மடியவும் ஏற்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், உடனடியாக மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

11. தமிழக அரசு அறிவித்துள்ள கரும்புக்கான கொள்முதல் விலையை, உடனடியாக மறு பரிசீலனை செய்து, டன் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 3,500 ரூபாய் என்ற அளவிற்காவது கிடைத்திடும் வகையில் அறிவிக்க முன்வரவேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.

12. வர்தா புயலின் சீற்றத்தால் வீடுகளை இழந்ததோடு, சாலையோரங்களில் செய்துவந்த தொழிலையும் இழந்து தவிக்கும் ஏழையெளிய மக்களுக்கும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீடும் நிவாரணமும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

13. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விரைவாக தேர்தல்களை நடத்தி, உள்ளாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாத்திட மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்படுகிறது.

14. பொது விநியோகத் திட்டக் குளறுபடிகளைக் களைய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

15. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும்.

16. ஊழல் செய்வோரைத் தண்டிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்துக.

கருணாநிதி பங்கேற்கவில்லை:

பரபரப்பான அரசியல் சூழலில் கூடிய திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக வரலாற்றில் கருணாநிதி பொதுக்குழுவில் கலந்து கொள்ளாதது இதுவே முதன்முறை.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கருணாநிதி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத நிலையில் அவரது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனத் தொண்டர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

‘செயல் தலைவர் பதவி’

இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளையில் அவர் கட்சிப் பொருளாளர் பதவியையும் வகிப்பார் எனத் தெரிகிறது. திமுகவில் செயல்தலைவர் பதவி உருவாக்கப்படுவது இது முதன்முறையாகும்.

தள்ளிப்போன பொதுக்குழு:

முன்னதாக கடந்த 20-ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பிறகு சிகிச்சை முடிந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

இந்நிலையில் ஜனவரி 4-ம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

அதன்படி இன்று (புதன்கிழமை) திமுக பொதுக்குழு நடைபெறுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016-ம் ஆண்டில் திமுக பொதுக்குழு கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.