புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன்- சமந்தா

“புத்தாண்டில் தரமான படங்களில் நடிப்பேன்” என்று நடிகை சமந்தா பேட்டியளித்துள்ளார்.

“எனக்கு இந்த வருடம் சிறந்த படங்கள் அமைந்தன. பாராட்டுகளும் கிடைத்தன. தெறி, 24 ஆகிய படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தேன். தெறி படத்தில் நான் மரணம் அடைவது போன்ற காட்சியை பார்த்து பலரும் அழுததாக கூறினார்கள். இது எனது நடிப்புக்கு கிடைத்த விருதாகவே கருதுகிறேன்.

சினிமாவில் நான் அழகாக இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கு காரணம் ஒளிப்பதிவு. ஒரு நடிகையை அழகாகவும் அழகில்லாமலும் காட்டுவது ஒளிப்பதிவாளர்கள்தான். எனக்கு மணிரத்தனம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது. அவர் படங்களில் நடிக்க விரும்பாத நடிகர்-நடிகைகளே கிடையாது. எனக்கும் அந்த ஆர்வம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது.

ஒரு தடவை மணிரத்னம் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்து கைநழுவிப் போனது. தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்த படத்தில் நடிக்க இயலவில்லை. அதை நினைத்து வருத்தப்படுகிறேன். புத்தாண்டில் மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். நல்ல கதை, கதாபாத்திரங்கள் இருக்கும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. அதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஆனால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் நடிப்பேன் என்ற பிடிவாதம் எதுவும் எனக்கு இல்லை. அதுபோன்ற கதைகளை தேடி ஓடவும் மாட்டேன்.

இந்த வருடம் 5 படங்களில் நடித்து இருக்கிறேன். வரும் புத்தாண்டிலும் தரமான கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்.” இவ்வாறு சமந்தா கூறினார்.