காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டம்

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகம் அருகில் உள்ள பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக இன்று(30) இந்த ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த யுத்த காலத்தின் போது காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசாங்கம் உரிய பதிலை அளிக்க வேண்டும், மற்றும் சிறையில் விசாரணைகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் எனத் தெரிவித்தே இவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் குறித்த போராட்டமானது இன்று பிற்பகல் 4 மணி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.