அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் அசார்அலி சதம்

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார்அலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் அசார்அலி 66 ரன்னும், ஆசாத் சபீக் 4 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மழையால் 40 ஓவர்கள் பாதிக்கப்பட்டது.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் அணி தொடர்ந்து விளையாடியது. அசார் அலி மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 218 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார்.

56-வது டெஸ்டில் விளையாடும் அசார்அலிக்கு இது 12-வது சதமாகும். அவுஸ்ரேலியாவுக்கு எதிராக 3-வது சதத்தை பதிவு செய்தார். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 2-வது முறையாக மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தேனீர் இடைவேளை வரை மழை பாதிப்பு இருந்தது.

அப்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து இருந்தது. அசார்அலி 112 ரன்னும், ஆசாத்சபீக் 48 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.