ரவிராஜ் படுகொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிப்பு !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும், ஏழு பேர் கொண்ட சிங்க ஜூரிகள் சபை சிறிலங்கா நேரப்படி இன்று (24) சனிக்கிழமை அதிகாலை விடுதலை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக மற்றும் ஏழு பேர் கொண்ட சிங்கள ஜூரிகள் சபை முன்பாக நடந்த நீண்ட தொகுப்புரைகளை அடுத்து, இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மன்றில் நிறுத்தப்படாத முதலாவது, இரண்டாவது எதிரிகளையும், மன்னிறில் நிறுத்தப்பட்டிருந்த மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது எதிரிகளையும் விடுவித்து தீர்ப்பளிப்பதாக, சிங்கள ஜூரிகள் ஏழு பேரும் அறிவித்தனர்.

சிறிலங்கா நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டது.சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர்களும், கருணா குழு உறுப்பினர்களும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கருணா குழுவுக்கு சிறிலங்கா இராணுவத்தினால் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது என்று இராணுவம் ஒப்புக் கொண்டிருந்தமை உள்ளிட்ட சான்றுகளும் சாட்சியங்களும் முன்வைக்கப்பட்ட போதும், சிங்கள ஜூரிகள் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்துள்ளனர்.

ஏற்கனவே குமாரபுரத்தில் 26 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்தும் குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் அனைவரும் சிங்கள ஜூரிகளால் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடததக்கது.