எங்களுக்கு சீனா உத்தரவிட கூடாது- டொனால்ட் டிரம்ப்

ஒன்றுபட்ட சீனா என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என சீனா உத்தரவிட கூடாது என அமெரிக்காவின் எதிர்கால அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் திபெத் நாட்டை தனிநாடாக அறிவிக்கக்கோரும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் புத்தமத துறவியான தலாய் லாமாவுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளித்துள்ளது.

தனி திபெத் கோரிக்கையை முன்வைத்து உலகநாடுகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக தலாய் லாமா பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவ்வகையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை தலாய் லாமா சிலமுறை சந்தித்து தனது கோரிக்கை தொடர்பாக பேச்சு நடத்தியுள்ளார்.

ஆனால், திபெத் பிரிவினைக்கு அமெரிக்கா முழுமனதுடன் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை. ஒன்றுபட்ட சீனாவின் ஒருபகுதியாக திபெத் இருக்க வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக உள்ளது.

தலாய் லாமாவின் இந்த பிரச்சாரம் சீனாவுக்கு எரிச்சலூட்டி வருகிறது. தனி திபெத் கோரிக்கையை ஆதரரிப்பவர்களை சீனா தனது எதிரியாகவே கருதுகிறது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் டிரம்ப், சீனாவை சீண்டிப்பார்க்கும் விதமாக நேற்று தைவான் நாட்டு அதிபருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாக செய்தி வெளியானது.

தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்ட தைவான் அதிபர் ட்ஸாய் இங்-வென் தனது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அப்போது அமெரிக்கா-தைவான் இடையிலான நட்புறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க வருங்கால அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்தவாரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒரே சீனா’ என்பதுதான் அமெரிக்கா-சீனா இடையிலான அரசியல் உறவுகளின் மூலக்கூறாக உள்ளது. தைவான் விவகாரத்தை கவனத்துடன் கையாள்வதுடன், இந்த உறவுகளை சீர்குலைக்கும் வகையில் ஏற்படக்கூடிய தேவையற்ற இடையூறுகளை விலக்கி, இருதரப்பும் ‘ஒரே சீனா’ என்ற கொள்கையை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், சீனாவின் நிலைப்பாடு குறித்து நேற்று பேட்டியளித்த டிரம்ப், ஒன்றுபட்ட சீனா என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என சீனா உத்தரவிட கூடாது என்று கூறியுள்ளார்.

‘அணு ஆயுதங்களை வைத்திருக்கு வடகொரியாவுக்கு பக்கத்து நாடான சீனா அமெரிக்காவுக்கு எதுவுமே செய்ததில்லை. ஒரேசீனா என்ற சீன அரசின் கொள்கை எனக்கு புரிகிறது, ஆனால், அந்நாட்டுடன் நாம் வர்த்தகம் உள்ளிட்ட எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளாத நிலையில் நான் யாருடன் பேச வேண்டும் என்று அமெரிக்காவுக்கு சீனா உத்தரவிட கூடாது.

தைவான் அதிபரை நான் தொலைபேசியில் அழைத்து பேசவில்லை. அவராகவே எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். அது, மிக சிறிய உரையாடல்தான். அவரது அழைப்பை ஏற்று பேசியிருக்க கூடாது என்று இன்னொரு நாடு (சீனா) எனக்கு எப்படி அறிவுறுத்த முடியும்?

தைவான் அதிபரின் அழைப்பை நான் ஏற்காமல் போயிருந்தால், அது, அவரை அவமதித்ததாக அமைந்திருக்கும் அல்லவா?’ என அந்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளார்.