சிட்னியில் தாக்குதலை நடத்த திட்டமிட்டவர்களுக்கு 20 ஆண்டு சிறை

சிட்னியில், பயங்கரவாதத் தாக்குதலை நடத்த சதித்திட்டமிட்ட இருவருக்கு, 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஷியா புனிதத்தலம் ஒன்றில் தாக்குதல் நடத்த அந்த இரண்டு பேரும் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், அதற்கு மாறாக ஆயுதத் தாக்குதல் நடத்த அவர்கள் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்பட்டது.

அவர்களின் சதித்திட்டம் குறித்து பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டுக் குழுவுக்குத் துப்பு கிடைத்ததாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து அந்த நபர்களின் வீடுகள் சோதிக்கப்பட்டன. கைதுநடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு முன் அவர்கள் காணொளி ஒன்றைப் பதிவு செய்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அதில் அவர்கள், ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொடி ஒன்றை செய்துவைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.