81 ரக எறிகணைக் குண்டுகள் 16 மீட்பு

மட்டக்களப்பு குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்திலிருந்து சக்திவாய்ந்த 81 ரக எறிகணைக் குண்டுகள் 16   மீட்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக காகித ஆலை விசேட அதிரடிப்படையுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை  (12) மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குண்டுகளைச் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை வாழைச்சேனை விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தோடு, இவ்வாறான  குண்டுகள், ஆயுதங்கள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருப்பதுடன், இவ்வாறான குண்டுகள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், அது பற்றிய தகவல்களை அருகிலுள்ள பாதுகாப்புத்தரப்பினருக்கு அறியத்தருமாறும் பாதுகாப்பு தரப்பினர் கேட்டுக் கொள்கின்றனர்.