மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்துவிட்டது

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இந்த மக்கள் கிளர்ச்சி ஆட்சி மாற்றத்தில் மாத்திரமே முடியுமெனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ ஆகியோர் தற்போதையஅரசாங்கத்தின் தூண்களாக இருக்க, தற்போது அவர்கள் ஆட்டம் காண்கிறார்கள் எனவும் கூறினார்.

ஆட்சிபீடம் மேற்றிய பெரும்பான்மை இன மக்களே தற்போதைய அரசாங்கத்தை திட்டித்தீர்க்கிறார்கள். இவ்வாறான நிலையில் பேரினவாதிகளின் ஆதரவைத்தக்க வைக்க, நாட்டில் இல்லாத பயங்கரவாத, இனவாத, மொழிப்
பிரச்சினைகளை காட்டி அமைதியாக வாழும் இந்நாட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயல்கிறார்கள் எனவும் கூறினார்.

எஸ்.டப்ளியூ. ஆர்.டி.பண்டாரநாயக்கா தனிச் சிங்கள சட்டத்தைகொண்டுவருவதாகக் கூறி நாட்டில் பற்ற வைத்த தீ கடந்த 6 தசாப்தங்களாககொழுந்துவிட்டு எரிகிறது. இப்போது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்கிற புதிய தீயை
கொளுத்தியிருக்கிறீர்கள். இது எத்தனை தசாப்தங்களுக்கு பற்றிஎரியப்போகிறதோ என்றார்.