‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது’’- சுருதிஹாசன்

‘‘வீட்டில் பூஜை அறை கிடையாது. ஆனாலும் எனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது’’ என்று நடிகை சுருதிஹாசன் கூறினார்.

நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு:–

கடவுள் நம்பிக்கை

‘‘எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கடவுள் மீது இருக்கும் பக்தி சாதாரண நிலைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பிட்ட சாமிதான் என்று இல்லாமல் அனைத்து சாமிகளையும் கும்பிடுகிறேன். எனக்கு கடவுளை வழிபடுவதற்கு யாரும் சொல்லித் தரவில்லை. வீட்டில் பூஜை அறை கூட கிடையாது. ஆனாலும் தானாகவே கடவுள் நம்பிக்கை வந்து விட்டது. எப்படி கடவுள் பக்கம் ஈர்க்கப்பட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.

எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோவில்களுக்கு போகிறேன். புண்ணிய ஸ்தலங்களையெல்லாம் சுற்றி வருகிறேன். கோவிலுக்குள் எந்த சாமி இருக்கிறார் என்றெல்லாம் பார்ப்பது இல்லை. வழிபாட்டு ஸ்தலங்களை பார்த்தாலே கும்பிட்டு விடுவேன். படப்பிடிப்புகளுக்கு வெளியூர் செல்லும்போதெல்லாம் அங்கு இருக்கும் கோவில்களுக்கு சென்று விடுகிறேன். ஏராளமான கோவில்களில் சாமி கும்பிட்டு இருக்கிறேன்.

வேண்டுதல்

சாமி கும்பிடும் போதெல்லாம் கடவுளிடம் வேண்டியது என்ன என்று கேட்கின்றனர். எனக்கு எந்த வேண்டுதலும் இல்லை என்றால் அது பொய் சொல்வதுபோல் ஆகி விடும். எனக்கும் சின்ன சின்ன வேண்டுதல்கள் இருக்கிறது. சாமி கும்பிடும்போது அவற்றை நினைத்துக் கொள்வேன். ஆனாலும் கடமைகளை செய்வதில் தயக்கம் கூடாது. சும்மா இருந்துவிட்டு எல்லாவற்றையும் கடவுள் செய்ய வேண்டும் என்று கருதினால் அது சரியல்ல. கடமைகளை செய்து முடிக்க வேண்டும். முடிவை கடவுளிடம் விட்டு விட வேண்டும்’’ இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

சுருதிஹாசன் ‘சி–3’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தந்தை கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. பவன்கல்யாண் ஜோடியாக ‘காட்டமரயடு’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.