ஆஸ்திரேலியாவில் மாயமான சிறுமி 18 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள கார்னர்வோன் நகருக்கு அருகே உள்ள ஒரு முகாம் தளத்தில் இருந்து கிளியோ சுமித் என்ற 4 வயது சிறுமி கடந்த மாதம் 16-ந் தேதி தனது குடும்பத்தின் கூடாரத்தில் இருந்து காணாமல் போனாள்.

இந்த சிறுமியைத் தேடி பெரியதொரு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறுமியை பற்றிய தகவல் தருவோருக்கு 7.5 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5 கோடியே 62 லட்சம்) ரொக்கப்பரிசு வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த நிலையில் ஒரு வீட்டில் சிறுமி பூட்டி வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலையில் அந்த பூட்டிய வீட்டை போலீசார் உடைத்தபோது அங்கு ஒரு அறையில் அந்த சிறுமி இருப்பதை கண்டுபிடித்தனர்.

அந்த சிறுமியை ஒரு போலீஸ் அதிகாரி தன் கைகளால் தூக்கி, ‘‘உன் பெயர் என்ன?’’ என்று கேட்டார். அதற்கு அவள் ‘‘கிளியோ’’ என்றாள்.

அதைத்தொடர்ந்து அந்தச் சிறுமி அங்கிருந்து மீட்கப்பட்டு, அவளது குடும்பத்துடன் உடனடியாக சேர்த்து வைக்கப்பட்டாள். காணாமல் போன தன் மகள் உயிருடன் மீட்கப்பட்டதில் அவளது தாய் பரவசம் அடைந்தார். இதுபற்றி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், ‘‘எங்கள் குடும்பம் மீண்டும் முழுமையானது’’ என குறிப்பிட்டுள்ளார்.

சிறுமி கடத்தப்பட்டதாக தெரிய வந்து, அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், சிறுமி கிளியோ மீட்கப்பட்ட செய்தி அறிந்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து டுவிட்டரில் அவர் குறிப்பிட்டு, ‘‘அற்புதம், நிம்மதி அளிக்கும் செய்தி’’ என கூறி உள்ளார்.

சிறுமி மாயமாகி 18 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.