பூமியை நோக்கி வரும் புவி காந்த புயல்

புவி காந்த புயல் காரணமாக மின் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படலாம். மின்சாரத்தில் நிலையற்ற தன்மை, பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்பு உள்ளது.

பூமியை இன்று புவி காந்த புயல் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியதாவது:-

வலுவான புவி காந்த புயல் இன்று பூமியை நோக்கி வருகிறது. இது குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையில் அதன் தாக்கம் உணரப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவ முனையின் கீழ் பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், ஜெர்மனி, செக்குடியரசு, போலாந்து, உக்ரைன், ரஷியா, கஜகஸ்தான், மங்கோலியா, சீனா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் பகுதிகள் உள்ளன.

புவி காந்த புயல் காரணமாக மின் கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்படலாம். மின்சாரத்தில் நிலையற்ற தன்மை, பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்பு உள்ளது. மேலும் விண்கலத்திலும் சில தாக்கங்கள் ஏற்படலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.