அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது

அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க காங்கிரசின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரசின் மனித உரிமைகள் ஆணைக்குழு பயங்கரவாத தடைச்சட்டத்தினால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து தனது உறுப்பினர்களிற்கும் கலந்துகொண்டவர்களிற்கும் தெரிவிக்குமாறு அம்பிகா சற்குணநாதனிற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் இலங்கை தொடர்பாக இரு முக்கிய தலையீடுகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

எனது வாக்குமூலத்தில் நான் இலங்கையில் மனித உரிமைகள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை ஏற்படுத்திய பேரழிவுமிக்க தாக்கத்தை நான் விபரிக்கின்றேன்.

வரலாற்றுரீதியாக பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்களிற்கு எதிராக அளவுக்கதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

2019 உயிர்த்தஞாயிறுதாக்குதலிற்கு பின்னர் முஸ்லீம்களிற்கு எதிராகவும் பயன்படுதப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் எவரையும்கண்மூடித்தனமாக கைதுசெய்வதற்கும் நீதிபதியின் முன்னால் ஆஜர்படுத்தாமல் 18மாதங்கள் தடுத்துவைப்பதற்கான அனுமதியை வழங்குகின்றது.

நான் ஏன் கண்மூடித்தனமான என்ற சொல்லை பயன்படுத்துகின்றேன் ஏன் என்றால் கைதுகள் விசாரணையின் போது பெறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அல்லது குறிப்பிடத்தக்க சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெறுவதில்லை.

தனது தொழில்நடவடிக்கையின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என கருதப்படும் நபருடன் தொடர்பிலிருந்தவர் கைதுசெய்யப்படுகின்றார்.

வெஸ்டேர்ன் யூனியனில் குற்றவாளியின் பணப்பரிமாற்றத்தை கையாண்டவர்,குற்றவாளிக்கு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்த விற்பனை யாளர் போன்றவர்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அராபிய நூல்களை. முகமது நபியை போற்றும் அராபிய பாடல்கள் அடங்கிய நூல்களை வைத்திருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை- மீறப்படுகின்றன,செப்டம்பர் 28 ம் திகதி திருகோணமலையில் நபர் ஒருவரை கைதுசெய்தவர்கள்தாங்கள் யார்என்பதை தெரிவிக்கவில்லை.அதேபோன்று அவரை தடுத்தவைத்திருக்கும் இடத்தை தெரிவிக்கவில்லை.

குறிப்பிட்ட நபரை தாங்கள் கைதுசெய்துள்ளதை உறுதிசெய்யும் ஆவணம் எதனையும் அவர்கள் வழங்கவில்லை.

உதவிபொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கு மேற்பட்ட பொலிஸ்அதிகாரியொருவருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்தை விசாரணையின் போது ஆதாரமாக பயன்படுத்துதவற்கு பயங்கரவாத தடைச்சட்டம் அனுமதிக்கின்றது.

இதன் காரணமாக நபர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றனர்,

மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களில்84 வீதமானவாகள் தாங்கள் கைதுசெய்யப்பட்ட பின்னர் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

சித்திரவதை செய்யப்பட்டவர்களில் 90வீதமானவர்கள் சித்திரவதையின் பின்னர் ஒப்புதல் வாக்குமூலத்தில்கையெழுத்திடுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

95 வீதமான ஆண்கள் சிங்களத்தில் எழுதப்பட்ட ஆவணத்தில்கைச்சாத்திடுமாறு தங்களைபலவந்தப்படுத்தியதாகவும் அது தங்களிற்கு தெரியாத மொழியெனவும் குறிப்பிட்டுள்ளனர்.அந்த ஆவணத்தில் என்ன உள்ளது என்பதையும் அவர்களிற்கு விளங்கப்படுத்தவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் அனுமதியளிக்கப்படாத இடங்களில்தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதையும் மனித உரிமை ஆணைக்குழு அவதானித்துள்ளது.அவர்களிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட பின்னரே அவர்களை அனுமதியளிக்கப்பட்டுள்ள இடங்களிற்கு மாற்றும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.ஆகவே பல குற்றச்சாட்டுகள் அந்த வகையான ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே பெறப்பட்டவையாக காணப்படுகின்றன வேறு ஆதாரங்கள் எவையும் இல்லை.
இந்த விடயத்தில் இரண்டு முக்கியமான தலையீடுகளை மேற்கொள்ள முடியும்

முதலில் அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் ,இலங்கையுடனான அவர்களின் தொடர்பாடல்களின் போது தீங்கிழைக்கவேண்டாம் என்ற கொள்கையின் அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றவேண்டும்.

இதற்கு குறிப்பாக அமெரிக்காவினதும் சர்வதேச சமூகத்தினதும் நிதிஉதவிகள் கவனக்குறைவாக கூட ஒடுக்குமுறை அரசாங்கத்தை பலப்படுத்தக்கூடாது.

இது ஐக்கிய நாடுகளிற்கும் யுஎன்ஓடிசி போன்ற அதன் அமைப்புகளிற்கும் பொருந்தும். இரண்டாவது முக்கியமான தலையீடு சிவில் சமூகத்திற்கும் மனித உரிமை பணியாளர்களிற்குமான ஆதரவைவழங்குவதாகயிருக்கவேண்டும்.

குறிப்பாக கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் போன்றவற்றிற்கு தொடர்ச்சியாக உள்ளாகும் வடக்குகிழக்க குறித்ததாக இது காணப்படவேண்டும்.