மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்டது

விக்டோரியா

மிக நீண்ட காலம் முடக்க நிலையில் இருந்த நகர் என்ற பெயர் பெற்றிருக்கும் மெல்பன் நகர் முடக்கநிலையிலிருந்து மீண்ட அதே நாள், விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,189 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

முன்னர் கணித்ததற்கு ஒரு வாரம் முன்னராகவே, அக்டோபர் 30ஆம் தேதி, விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 80 சதவீதமாகும் என தற்போதைய கணிப்புகள் சொல்கின்றன.

வெளி நாடுகளிலிருந்து நவம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர் விக்டோரிய மாநிலம் வரும் நம் நாட்டவர், தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருந்தால், தனிமைப்படுத்தப் பட்டிருக்கத் தேவையில்லை என்று Premier Daniel Andrew அறிவித்தார்.

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 345 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.  கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதால், தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் வேலைகள் ஆரம்பித்து விட்டதாக இன்று காலை சிட்னி விமான நிலையத்திலிருந்து பேசிய Premier Dominic Perrottet கூறினார்.  Qantas விமான நிறுவனம், அதன் ஊழியர்களை அடுத்த வாரத்திலிருந்து மீண்டும் பணியில் ஈடுபடவைக்கப் போகிறது என்ற செய்தியை அவர் வரவேற்றார்.

தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இல்லாத பயணம் மேற்கொள்ள சிங்கப்பூருடன் ஒரு Travel Bubble உருவாக்கும் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அரசு இருப்பதாகவும் அடுத்த சில வாரங்களில் இது செயலுக்கு வரும் என்றும் பிரதமர் அறிவித்தார்.