பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமானது- சரத் வீரசேகரவிற்கு மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பதில்

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இந்த அரசாங்கம் போன்று அரசாங்கமொன்று ஏதேச்சாதிகார போக்கு கொண்டதாகவும் சட்டத்தின் ஆட்சியை மதிக்காததாகவும் காணப்படும்போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமானது என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் சரத்வீரசேகர அரசமைப்பின் 14 வது பிரிவு குறித்து கேள்விப்படவில்லை போல தோன்றுகின்றது.
ஜனநாயகத்தில் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி அரசாங்கம் தனது நடவடிக்கைக்கு அல்லது நடவடிக்கை இன்மைக்கு பொறுப்புக்கூறவேண்டும் என கோருவதற்கான ஒரு வழிமுறை ஆர்ப்பாட்டம்.

இந்த அரசாங்கம் போன்று அரசாங்கமொன்று ஏதேச்சாதிகார போக்கு கொண்டதாகவும சட்டத்தின் ஆட்சியை மதிக்காததாகவும் காணப்படும்போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்குகு எதிராக அரசாங்கம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறான நடவடிக்கையை எடுக்காவிட்டால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையிலும் இதனை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டுள்ள தருணத்தில்சதிகாரர்கள் 100,000 பேரை ஆர்ப்பாட்டங்களிற்காக வீதிக்கு கொண்டுவந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த சதிகாரர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும்வீழ்ச்சியை சந்தித்துக்கொண்டிருந்த தருணத்தில் அப்பாவி ஆசிரியர்கள் அதிகளவு சம்பளத்தை கோருமாறு தவறாக வழிநடத்தப்பட்டார்கள் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.