விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை. அப்படியென்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னை கேட்கலாம்.

நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தனியாக இருக்கிறேன் என்று தகவல்கள் பரவுகிறது.

அதில் உண்மை இல்லை. வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றனர். அதற்காகத்தான அவரை மணந்தேன். அதன்பிறகு எனது வேலையை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அவசியம் ஏற்படும்போது கணவரை சந்திக்க செல்கிறேன்” என்றார்.