புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா

இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும்.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் தென்கொரியா அழுத்தும் கொடுத்து வரும் நிலையில், வடகொரியோவோ அதனை பொருட்படுத்தாமல் தனது ராணுவ திறன்களை தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே செல்கிறது.

அதன் ஒரு பகுதியாக வடகொரியா தொடர்ச்சியாக புதிய ஏவுகணைகளை சோதித்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா நேற்றுமுன்தினம் புதிய குறுகிய தூர ஏவுகணையை சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்தது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டுமொரு ஏவுகணையை சோதித்தது. ஒலியை விட வேகமாக செல்லும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை வெற்றிகராமாக சோதிக்கப்பட்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. ஹவாசாங்-8 என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் படைத்தது என்றும் சோதனையின் போது ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கே.சி.என்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். இந்த ஆயுத அமைப்பின் வளர்ச்சி எல்லா வகையிலும் தற்காப்புக்கான தேசத்தின் திறன்களை அதிகரித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில் ‘‘பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சட்டவிரோத ஏவுகணை சோதனையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.