பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க தடை இல்லை!

எங்களுடைய அன்பை வெளிப்படுத்தவும், பாசத்தை உணர்த்தவும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை கலாசாரமாக கொண்டு உள்ளதாக ஒருவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி முத்தம் கொடுத்துக் கொள்வது வழக்கம். அப்போது ஒருவிதமான சத்தத்தையும் எழுப்புவார்கள்.

அது மட்டுமல்ல இளம் ஜோடிகள் என்றால் ஒருவருக்கு ஒருவர் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்து கொள்வார்கள்.

இந்நிலையில், கொரோனா பரவியதையடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் கலாசாரத்தை பொதுமக்களால் தொடர முடியவில்லை.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்தார்கள். பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டது.

மேலும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். எனவே பிரான்ஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.

அதில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்வதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. எனவே இனி எப்படி வேண்டுமானாலும் முத்தம் கொடுத்து கொள்ளலாம். உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுப்பதற்கு இனி எந்த பிரச்சனையும் இல்லை.

இது இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இதுபற்றி வின்சென்ட் செஸ்னக் என்பவர் கூறும் போது, “எங்களுடைய அன்பை வெளிப்படுத்தவும், பாசத்தை உணர்த்தவும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை எங்களது கலாசாரமாக கொண்டு உள்ளோம். ஆனால் இவ்வளவு காலமும் இதற்கு தடை இருந்ததால் மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த கஷ்டம் இப்போது நீங்கி விட்டது. இது எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது” என்றார்.