‘பொன்மகள் வந்தாள்’ படத்தால் வெளிவந்த உண்மை – பெண்களுக்கு ஜோதிகா அறிவுரை

பொன்மகள் வந்தாள் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி நடிகை ஜோதிகா அறிவுரை வழங்கியுள்ளார்.

ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது. பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளையும் அவர்களின் பாதுகாப்பையும் மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.
பொன்மகள் வந்தாள் படத்தை சென்னை ராயபுரத்தில் உள்ள 9 வயது சிறுமி பார்த்து விட்டு 48 வயது உறவினர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தாயிடம் கூறியிருக்கிறார். இதுகுறித்து உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு அந்த உறவினர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்தியை பார்த்து பலரும் பொன்மகள் வந்தாள் படத்தை வலைத்தளத்தில் பாராட்டினர். இந்த செய்தியை நடிகை ஜோதிகாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பாதிக்கப்படும் பெண்கள் அமைதியை தகர்த்து எறிந்து வெளியே வரும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், “அந்த அமைதி நிலையை தகர்த்து எறியுங்கள். ஒவ்வொரு தடவையும் ஒரு பெண் அவளுக்காக எழுந்து நிற்கும்போது அவள் தன்னை அறியாமலேயே எல்லா பெண்களுக்காகவும் எழுந்து நிற்கிறாள்“ என்று கூறியுள்ளார்.