கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வாகாது!-ஆஸ்திரேலிய மாநிலம்

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்குள்ள மாநிலங்கள், பிரதேசங்கள் ஊரடங்கினால் தொற்றினை ஒழிக்க முடியாது எனும் எண்ணத்திற்கு வந்துள்ளன. இதனை தொற்று பரவலுக்கு இடையில் வாழ்க்கையை நடத்துவது குறித்து ஆஸ்திரேலிய மாநில அரசுகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளன.

ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் 25 சதவீதமானோரை கொண்டுள்ள விக்டோரியா மாநிலம், 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 70 சதவீதமானோர் முழுமையான தடுப்பூசி செலுத்திய பின்னர், ஊரடங்கினை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

வரும் அக்டோபர் 26ம் தேதிக்குள் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தை அடையக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் விக்டோரிய மாநில பிரீமியர் டேனியல் ஆண்டூருஸ். இதுவரை விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 43 சதவீதமாக உள்ளது.

“ஊரடங்கு நிரந்தரமாக கொரோனா தொற்றினை ஒடுக்கிவிடாது. தொற்றினை எதிர்கொள்ள தடுப்பூசியை செலுத்துவதற்கான காலத்தை மட்டுமே ஊரடங்கினால் வழங்க முடியும்,” எனக் கூறியுள்ளார் ஆண்டூருஸ்.

ஆஸ்திரேலியாவின் பிற மாநிலங்களும இந்த எண்ணத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகின்றது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து சர்வதேச பயணத்தடை நீட்டித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.