காற்று மாசு அடைதலும்… மூளை பாதிப்பும்…

காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும்.

காற்று இல்லாமல் நம்மால் 5 நிமிடம்கூட இருக்க முடியாது. நாம் ஒரு நாளைக்கு 22 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். நாம் சுவாசிக்கும் காற்றில் 78 சதவீதம் நைட்ரஜனும் 21 சதவீதம் ஆக்சிஜனும் மீதமுள்ள 1 சதவீதம் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் ஆக்சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்களும் கலந்துள்ளன. வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது.

காற்று மாசுபடுவதால் ஒரு வருடத்துக்கு 90 லட்சம் முதல் 120 லட்சம் பேர் வரை இறக்கிறார்கள். பக்கவாதம், மாரடைப்பு, நுரையீரல் நோய், புற்றுநோய் போன்ற நோய்களும் அதிகரித்த வண்ணமே உள்ளன. காற்று மாசுபடுவதால் நுரையீரல் நோய் வரும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், காற்றும் கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையது. காற்று மாசுபட்டால் நமது மூளையிலும் பாதிப்பு ஏற்படும்.
நமது மூக்கில் உள்ள ஆல்பாக்டரி எபிதீலியம் எனும் உறுப்பு, நாம் வாசனையை உணர்வதற்கு உதவுகிறது. இதுவே நம் மூளையையும் காற்றையும் தொடர்புபடுத்துகிறது. நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும்போது, மாசு அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது.
மாசுத்துகளின் அளவு அதிகமாக இருந்தால், நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்ளே செல்லாமல் தடுக்கிறது. இந்த துகளானது கொஞ்சம் சிறியதாக இருந்தால் நமது தொண்டைப் பகுதிவரை செல்கிறது. ஆனால், இந்த துகள் நுரையீரலை சென்றடையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளியே தள்ளுகிறோம்.
இந்த துகள், மிகவும் நுண்ணிய அளவில் இருந்தால் ஆல்பாக்டரி எபிதீலியம் வழியாகச் சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஞாபகத்திறன் குறைந்து மூளை தன்னிலை இழந்து நிற்கும். எனவே, காற்றைச் சுத்தமாக வைக்க முயல்வோம்!
குழந்தைகளின் மூளையானது முதல் ஆயிரம் நாட்களில்தான் (அதாவது 2¾ வயதுக்குள்) 90 சதவீத வளர்ச்சியை பெறுகிறது. இந்த நாட்களில் குழந்தை, மாசுபட்ட காற்றை சுவாசித்தால், இந்த நச்சுப் பொருட்கள் மூளையில் உள்ள வெள்ளைப் படலத்தை பாதிக்கிறது. இதனால் குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் நடவடிக்கையிலும் மாறுதல் ஏற்படுகிறது.
அந்தக் குழந்தையிடம் கோபமும் சமூகத்துக்கு எதிரான சிந்தனைகளும் அதிகரிக்கின்றன. மாசுபட்ட காற்று, நமது மரபணுவையே பாதிக்கும் தன்மை கொண்டது. இதனால் நாம், கற்பனைகூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு சிறுவயதிலேயே பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது.