நுவரெலியாயாவில் ஐந்து வருடங்களில் 52 ஆயிரம் குடும்பக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!

இந்தியா வம்சாவளி தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் (2015 – 2019) சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் 52 ஆயிரத்து 183 குடும்பக்கட்டுப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தகவல்கள் உறுதி செய்துள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் தொழிலாளர் குடும்பங்களை ஏமாற்றி குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற. குறிப்பாக இதுத் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் கடந்தக் காலங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம்
ஆண்டுவரையில் மேற்கொள்ளப்பட்டக் குடும்பக்கட்டுப்பாடுகள் எண்ணிக்கை
தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடும்பக்கட்டுப்பாடு முறைகளான லூப்ஸ், மாத்திரை, தடுப்பூசி, ஆண்களுக்கான
தூய்மையாக்கி (Male Sterilize – Vasectomy) பெண்களுக்கான தூய்மையாக்கி (Female
Sterilize – LRT), வேறு முறைகள் என 6 முறைகளின் கீழ், நுவரெலியா
மாவட்டத்தில் குடும்பக்கட்டுப்பாடுகளை செய்யப்படுகின்றன.

லூப்ஸ் முறையின் கீழ் 2015 – 1,587, 2016 – 2,579, 2017 – 1,533, 2018 – 1,170, 2019 –
1,543, என்ற எண்ணிக்கையில் குடும்பக்கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மாத்திரை முறையின் கீழ் 2015 – 1,642, 2016 – 2,406, 2017 – 1,638, 2018 – 1,766,
2019 – 1,855 என்ற எண்ணிக்கையில் குடும்பக்கட்டுப்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தடுப்பூசி முறையின் கீழ் 2015 – 1,386, 2016 – 1,927, 2017 – 3,238, 2018 – 3,490,
2019 – 4,349 என்ற எண்ணிக்கையில் குடும்பக்கட்டுப்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆண்களுக்கான தூய்மையாக்கி முறையின் கீழ் 2017 – 2019 வரையிலான
மூன்று வருடங்களில் மொத்தமாகவே 76 குடும்பக்கட்டுப்பாடுகளே
செய்யப்பட்டுள்ளன.

பெண்களுக்கான தூய்மையாக்கி முறையின் கீழ் 2015 – 1,423 , 2017 – 1,827,
2018 – 3,926, 2019 – 3,699 என்கிற எண்ணிக்கையிலும், வேறு முறைகளின் கீழ்
2015 – 1,423, 2017 – 3,944, 2018 – 3,926, 2019 – 3,699 என்கிற எண்ணிக்கையிலும்
குடும்பக்கட்டுபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேறு முறையின் கீழும் அதிகளவான குடும்பக்கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் அது எவ்வாறான முறைகள் என்பதுத் தொடர்பான தகவல்கள் இல்லை. 2015 – 2019 வரையிலான 5 வருடங்களில் மாத்திரம் லூப்ஸ் முறையில் 8,412, மாத்திரை முறையில் 9,307, தடுப்பூசி முறையில் 14,390, ஆண்களுக்கான தூய்மையாக்கி முறையில் 76, பெண்களுக்கான தூய்மையாக்கி முறையில் 7,006, வேறு முறைகளின் கீழ் 12,992 குடும்பக்கட்டுப்பாடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த 5 வருடங்களுக்குள் 52,183 பேருக்கு குடும்பக்கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சராசரியாக வருடம் ஒன்றுக்கு 10,403 பேருக்கு குடும்பக்கட்டுப்பாடுகள் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் மேற்கொள்ளப்படுவது இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் குடும்பக்கட்டுப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2015ஆம் ஆண்டு 7,461ஆக இருக்கும் மொத்த குடும்பக்கட்டுபாடுகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டு 13,590ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களில் இந்த எண்ணிக்கை 6,129ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2015 – 2019 ஆம் ஆண்டுவரையில் கடந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஆட்சி செய்திருந்ததோடு, மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இருவர் அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.